Sunday, 23 June 2019

நடத்தைவாதம்

உளவளத்துணையில்  நடத்தைவாதமும் ஸ்கின்னரும்

நடத்தை வாதத்தை ஐவன் பவ்லோவ் மற்றும் ஜோன் வாட்சன் ஆகியோர் 1925 இல் ரஷ்யாவிலும்  ஐக்கிய அமெரிக்காவிலும்   தோற்றுவித்தனர். அமெரிக்கா நடத்தைவாதத்தின் ஆரம்ப  கர்த்தாவான வாட்சனின் மரபாகவே  இது இனங்காணப்படுகின்றது.   அதனை விருத்தி செய்தவர் ஸ்கின்னர் ஆவார். 
ஸ்கின்னர் அமெரிக்காவை சேர்ந்த உளவியலாளரும் விஞ்ஞான ஆய்வாளரும் ஆவார். இவர் கற்றல் செயன்முறை எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை விளக்கும் பொருட்டு கருவிசார் நிபந்தனைப்பாட்டு கொள்கையினை முன்வைத்தார்.
இதன்படி உளவியல் நடத்தை விஞ்ஞானமாகவும் புறநிலை விஞ்ஞானமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. நடத்தைகள் யாவும் கற்றலின் விளைவால் ஏற்படுகின்றன.  இங்கு தூண்டில், துலங்கல் என்ற வகையில்  நடத்தைத் தொழிற்பாடுகள் ஆராயப்படுகின்றது.  ஒருவரின் நடத்தையை கற்றல் மூலம் விரும்பியவாறு உருவாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம்  என ஸ்கின்னர்  கூறுகின்றார்.   இவர்  கற்றல் சார்பாகவும் பிரச்சினைகள் சார்பாகவும் பாடசாலை   மாணவர்கள் மத்தியிலும்  ஏற்படும் நடத்தைகளை சீராக்கலாம்  என கூறுகின்றார்.  ஸ்கின்னர் திட்டமிட்ட நடத்தை மாற்றத்துக்கு பயன்படுத்தும் நுட்பங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.,
1. நடத்தைத் திருத்தியமைப்பு
2. நேர் மீள வலியுறுத்தல்.
3. அடையாளப் பொருளாதார முறை
4. மூயம் அகற்றல் ஸ்கின்னரால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கியமான சிகிச்சை நுட்பமாகும்.   நடத்தைத் திருத்தியமைப்பு அணுகுமுறைப் பிரயோகித்து ஆட்களின் பல்வேறு நடத்தைப் பிறழ்வுகளை மாற்றியமைக்கலாம். எனக் கூறுகின்றார்.

ஸ்கின்னர் மனித நடத்தைகள் தற்செயலாக  நிகழ்வன அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் மனித நடத்தையை இரு விதமாக பாகுபடுத்துகிறார். அவை துலங்கல்சார் நடத்தை, கருவிசார் நடத்தை என்பனவாகும்.  துலங்கல்சார்  நடத்தை என்பது குறித்த ஒரு சிறப்பான தூண்டியால் உருவாக்கப்பட்ட நடத்தையாகும். கருவிசார் நடத்தை என்பது வெளிப்படையாக புலப்படாத சில தூண்டிகள்  காரணமாக உயிரியிடத்தில் வெளிப்படும் நடத்தையாகும். நடத்தல், பேசுதல்,பேசுதல், விளையாட்டு போன்றன கருவிசார் நடத்தை துலங்கல்களாக உள்ளன. கருவிசார் துலங்கல் ஒன்று ஏற்பட்டு அது மீளவலியுறுத்தப்படுமாயின் அத்துலங்கல் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மீளவலியுறுத்தல் வாயிலாகவே ஒருவரின் நடத்தையை கட்டியெழுப்ப முடியும் என்பது ஸ்கின்னருடைய நம்பிக்கையாகும்.
 விரும்பிய நடத்தைகளை வெகுமதிகள் வழங்கி பாராட்டுவதன்  மூலமும் விரும்பாத நடத்தைகளை தண்டித்தல் மூலமும் மாற்றியமைக்கலாம் எனக் கூறப்படுகின்றது. ஒருவரின் விருப்பு,வெறுப்பு, தேவை, எதிர்பார்ப்பு முதலியவை குறுக்கிடும் போது துலங்கலில் பங்கு கொள்ள முடியும். முன்னைய நிகழ்ச்சிகளை மீட்டெடுத்தலும் நல்லவற்றைத் தொடர்புபடுத்தலும் தீயவற்றை மீள வலியுறுத்தாது விடுதலும் பின்னூட்டல்கள், வாயிலாக நல்ல நடத்தைகளை உருவாக்குதலும் நடத்தை வாதத்தில்கையாளப்படுகின்றன. சூழலை மாற்றியமைக்காது தனி மனித நடத்தையை மாற்றமுயலும் பொழுது அது வெறும் இலட்சியமாகி விடுகின்றது.  எனவே ஆசிரியர் மாணவர்களின் தேவைகளை புறக்கணிக்காது நல்ல நடத்தைகள் தோற்றுவிக்கும் வழிவகைகளான ஊக்கமும் வெகுமதிகளும் வழங்கி வழிப்படுத்த வேண்டும். தளர்த்தல் பயிற்சி, ஒழுங்கு முறையான உணர்ச்சி குறைப்பு , உறுதியாக நிற்றலில் பயிற்சி என்பன நடத்தை சார்  செயல்முறைகளாக  விளங்குகின்றன.




உசாத்துணை
1. சாகுல் ஹமீது,வி.எம். (2007), “கற்பித்தல் கற்றலின் உளவியல்”, சாரதா பதிப்பகம், சென்னை.
2. நௌபர்,யூ.எல்.எம்.” உளவியல் சார் உளவளத்துணை அணுகுமுறை” ,IWTHI Trust,  கொழும்பு- 5

No comments:

Post a Comment